"உப்பு சப்பில்லாத கேஸு.. ஆனாலும் விடமாட்டோம்" ராகுல் காந்திக்காக ஓடோடி வந்த "வாரிசு".. யார்னு பாருங்க
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில்தான் 'மோடி' எனும் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் நேற்று (மார்ச் 23) தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல தீர்ப்பு வெளியாகும்போது ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும் என்று நீதிபதி ஹெ.ஹெ.வர்மா அறிவித்திருந்தார். அதன்படி நேற்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தீர்ப்பில் ஐபிசி பிரிவு 499,500ன்படி ராகுல்காந்திதான் இந்த குற்றத்தை செய்திருந்தார் என்பது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தகுதி நீக்கம்
மேலும் தண்டனை குறித்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அவருக்கு பினையும் உடனடியாக வழங்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கினார். இது நேற்று பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு விஷயம் குறித்து நேற்றே அச்சம் எழுந்தது. அதாவது, இவரது எம்.பி பதவி என்ன ஆகும்? என்பதுதான் அந்த சந்தேகம். எம்பி அல்லது எம்எல்ஏவாக இருக்கும் நபருக்கு 2 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் அந்த பதவியில் தொடர முடியாது. அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். எதிர்பார்த்தபடி இன்று மக்களவை செயலகம் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

எதிர்ப்பு
இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிரப்பு மேலெழுந்திருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறுகையில், "ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய பாஜக அனைத்து வழிகளிலும் முயன்றது. உண்மை பேசுபவர்களை வைத்திருக்கும் பழக்கம் பாஜகவுக்கு கிடையாது. ஆனால் நாங்கள் தொடர்ந்து உண்மையை பேசுவோம். அவசியமெனில் நாங்கள் சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டோம்" என்று கூறியுள்ளார். உத்தவ் தாக்ரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல்வேறு மாநில தலைவர்களும் முதலமைச்சர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சட்ட போராட்டம்
ஆனால் சட்டத்தின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக கூறியுள்ளது. அதாவது சாதாரண இந்திய குடிமகனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அதே சட்டம்தான் ராகுல் காந்திக்கும் பொருந்தும். அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் மக்களவை சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

கார்த்திக் சிதம்பரம்
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சிதம்பரம், "இந்த நெருக்கடியை நாங்கள் நேற்றே எதிர்பார்த்தோம். எனவே இதனை எதிர்த்து நாங்கள் சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து நாங்கள் வெற்றி பெறுவோம். இது உப்பு சப்பு இல்லாத வழக்கு" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications