நடிகை பாவனா கடத்தல் வழக்கு - திலீப், காவ்யா மாதவன் விரைவில் கைதாகின்றனர்
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் திலீப், காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்: மலையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பமாக நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனும் அவரது தாயாரும், திலீப்பின் நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷாவும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா கதையை விட பரபரப்பும், திருப்பங்களும் கொண்டதாக உள்ளது பாவனா கடத்தல் வழக்கு. பாவனா கடத்தி மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பாக பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை அவர் மறுத்தார். அதே நேரத்தில் பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீசில் நடிகர் திலீப் புகார் செய்தார்.
நடிகர் திலீப்பிடம் விசாரணை
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், நடிகர்கள் திலீப், நாதிர் ஷா மற்றும் முன்னாள் மேலாளர் அப்புனி ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர். கடந்தவாரம் நள்ளிரவு 1 மணி வரை மூன்று பேரிடமும் அலுவாவில் உள்ள போலீஸ் முகாமில் விசாரணை நடத்தப்பட்டது.
பல்சர் சுனில் போட்டோ
இந்த நிலையில் திலீப்பின் புதிய படமான ஜார்சேட்டன்ஸ் பூரம் என்ற படத்தின் படப்பிடிப்பு தளம் அருகே பல்சர் சுனில் நடமாடிய வீடியோ ஒன்று கேரளா ஊடகங்களில் வெளியாகி உள்ளது. திலீப் படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட வேறு புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
யார் அந்த மேடம்
மேலும், பேனி பாலகிருஷ்ணன் என்ற வக்கீல், பல்சர் சுனிலுக்கு ஜாமீன் பெற்றுத் தரக்கோரி, 2 பேர் தன்னை வந்து சந்தித்ததாகவும், மேடத்திடம் பேசி விட்டு மீண்டும் வருகிறோம் என்று கூறிச் சென்றதாகவும் போலீசில் தெரிவித்துள்ளார்.
மெமரி கார்டு
பாவனாவை ஆபாசமாக படம் பிடித்த செல்போனில் இருந்த மெமரி கார்டை காவ்யா மாதவனின் நிறுவனத்தில் ஒப்படைத்ததாக போலீசில் தெரிவித்தார். இதன் அடிப்படையில் கொச்சி காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்-லைன் ஆடை நிறுவனத்தில் 3 நாட்களுக்கு முன்பு கொச்சி போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
டிஜிபி உத்தரவு
அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள லோக்நாத் பெக்ரா பாவனா வழக்கு குறித்து விசாரித்து வரும் குற்றப்பிரிவு ஐஜி தினேந்திர கஷ்யப் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாவனா கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்யும்படி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் வளையத்தில் திலீப்
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷாஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் நாதிர்ஷா அளித்த சில தகவல்களில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் போலீசார் விசாரிக்க தீர்மானித்துள்ளனர்.
சிக்குவது யார் யார்
நடிகர் திலீப், அவருடைய மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவ்யா மாதவன், அவருடைய தாயார் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.
தலைமறைவு
இந்நிலையில் காவ்யாமாதவனும் அவரது தாயாரும் நேற்று முதல் திடீர் என்று மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களது வீடு கொச்சியில் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இவர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர் நாதிர்ஷாவும் மாயமானதாக கூறப்படுகிறது.