டிவி சேனல்களை குழிதோண்டி புதைக்கனும்னு சொன்னது சரிதான்: சந்திரசேகர் ராவ் மகள் கவிதா
ஹைதராபாத்: தெலுங்கானாவை அவமதிக்கும் டிவி சேனல்களை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியது சரியே என்று அவரது மகள் கவிதாவும் கூறியுள்ளார்.
இரு தொலைக்காட்சி சேனல்கள் தெலுங்கானாவுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நிகழ்ச்சி ஒன்றில் பெயர் குறிப்பிடாமல் மிரட்டல் விடுத்திருந்தார் சந்திரசேகர் ராவ். 10 அடி ஆழத்தில் அவர்களை புதைத்துவிட வேண்டும்; தேவைப்பட்டால் கழுத்தை நெறிப்போம் என்றும் எச்சரித்திருந்தார்.

இதற்கு அந்த 2 சேனல் ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சந்திரசேகர் ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா கூறுகையில், சந்திரசேகர் கூறியதை மட்டுமே நீங்கள் பார்க்கக் கூடாது. அந்த தொலைக்காட்சிகளைப் பாருங்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் பற்றிய அவர்களின் விமர்சனங்களைக் கேளுங்கள். அவர் அரசை விமர்சிக்க பயன்படுத்தும் வார்த்தைகளை கவனியுங்கள். அந்த 2 சேனல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதனிடையே 2 சேனல்களும் சட்டசபை நடவடிக்கைகளை அவமதித்தால் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவும் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications