கெஜ்ரிவால் தர்ணா: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனது அமைச்சர்கள் கூறுவதை கேட்காத டெல்லி போலீசாரை கண்டித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து இரண்டு போலீசாரை கட்டாய விடுப்பில் அனுப்பிய பிறகே அவர் தர்ணாவை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், முக்கிய பதவியை வகித்துக் கொண்டு சட்டத்தை மீறிய கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கறிஞர் என். ராஜாராம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கூட போலீசார் எப்படி அனுமதித்தனர் என்று கேள்வி எழுப்பியது. கலைந்து போகுமாறு கூறியும் செல்ல மறுத்த கூட்டம் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்று மேலும் கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications