கெஜ்ரிவாலுக்கு சோர்வு… விதர்பா கூட்டம் ரத்து… விருந்தில் பங்கேற்பார்
மும்பை: டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது விதர்பா பொதுக்கூட்ட பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் விதர்பாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று உரையாற்றுவதாக இருந்தது. இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் பிரீத்தி சர்மா தெரிவித்துள்ளார்.
ஆட்டோ, ரயில் பயணம்
லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி அந்தேரி ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவருடன் ஆத் ஆத்மி தொண்டர்கள் ரிக்சாக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் பின்தொடர்ந்தனர். கெஜ்ரிவால் பயணம் செய்வதை படம்பிடிக்க ஏராளமான ஆத் ஆத்மியினர் முயன்றனர்.
கூட்ட நெரிசல்
இதனால், விமான நிலையத்தில் இருந்து அந்தேரி ரயில் நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலை தாண்டி அந்தேரி ரயில் நிலையத்திற்கு கெஜ்ரிவால் சென்றார். அங்கும் தொண்டர்கள் அதிகளவு கூடியிருந்ததால், நெரிசல் ஏற்பட்டது.
பொது பெட்டியில் பயணம்
இதனால், ரயில் நிலையத்தில் இருந்த சோதனை கருவிகளை சிலர் அடித்து நொறுக்கினர். பின்னர் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் ஏற மறுத்து, டிக்கெட் எடுத்துக் கொண்டு மின்சார ரயிலின் பொதுவகுப்பு பெட்டியில் அர்விந்த் கெஜ்ரிவால் பயணம் செய்தார்.
ஓய்வெடுக்க அறிவுரை
தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் ரயில் நிலையம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதில் கெஜ்ரிவாலுக்கு மிகுந்த சோர்வு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், கெஜ்ரிவால் உடல்நலக்குறைவுடன் இருப்பதால், ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அவரது விதர்பா பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருந்தில் பங்கேற்பார்
அதே சமயம் நாக்பூரில் கட்சி நிதி திரட்டுவதற்காக நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்து நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பங்கேற்பதற்காக இன்று மாலை கெஜ்ரிவால் நாக்பூர் செல்வார் என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட நபர் ஒருவருக்கு ரூ.10000 வசூலித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.