சமையல் எரிவாயு விலை கொள்ளை: முகேஷ் அம்பானி, வீரப்ப மொய்லி மீது வழக்கு- கெஜ்ரிவால்
டெல்லி: சமையல் எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக, பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, முகேஷ் அம்பானி நிறுவனம் மீது வழக்கு தொடர டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ரிலையன்ஸ் நிறுவனம் மீது நான்கு பேர் அரசிடம் புகார் மனு அளித்துள்ளனர்.காஸ் இறக்குமதியில் அந்த நிறுவனம் தவறாக செயல்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிரமதருக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இயற்கை எரிவாயு விலை நிர்ணயத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்போவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே குற்றச்சாட்டை முன்வைத்த கெஜ்ரிவால், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எண்ணெய் வயல்களை ஒப்பந்தம் விட்டதில் அதிகம் சலுகை காட்டியுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த அரசை கட்டாயப்படுத்துகிறது. இல்லாவிட்டால் தங்களின் உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று சில்லறை வியாபாரிகளைப்போல் அவர்கள் அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வற்புறுத்தல் காரணமாகவே அந்த துறையிலிருந்து முன்னாள் பெட்ரோலிய மந்திரி, ஜெய்பால் ரெட்டி வெளியேறியுள்ளார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைகளை கடுமையாக எதிர்த்தார்.
உற்பத்தியை குறைப்பதாக மிரட்டிய ரிலையன்ஸ் நிறுவனத்தை தண்டிக்கவும் அவர் விரும்பினார். அவர் நேர்மையானவர். அதனாலேயே அவர் அந்த துறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதுபோன்று பிரச்சினைக்காக 2006-ம் ஆண்டு பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு முரளி தியோரா அப்பதவிக்கு வந்தார். இந்த விவகாரங்களில் அட்டர்னி ஜெனரலின் கருத்தை பிரதமர் கேட்காது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார் கெஜ்ரிவால். தற்போது மீண்டும் இதே பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.
கடந்த வாரம் அனில் அம்பானியின் மின் நிறுவனத்தை ஒரு பிடி பிடித்த கெஜ்ரிவால் இந்த வாரம் முகேஷ் அத்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது கைவைத்துள்ளார். பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications