கேஜ்ரிவால் மீது ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு.. மே 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் மீது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு மே மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 14 ஆண்டுகாலம் தலைவராக பதவி வகித்தவர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இவரது பதவி காலத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே தம் மீதான ஊழல் புகார்களை நிராகரித்துள்ள அருண்ஜேட்லி, கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிபதி சுமித் தாஸ் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை மே 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.