இனிதான் ஒரிஜினல் "சாமானியர்களின் ஆட்சி" தொடங்குகிறது.. டெல்லியில்!
Recommended Video

டெல்லி: சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பால் பெரும் உற்சாகமும், பலமும் அடைந்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது கனவுத் திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற அதிரடியாக களம் இறங்கியுள்ளார். அதிகாரிகள் அனைவரும் தங்களது பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது முதலே அதை பாடாய்ப்படுத்தி விட்டார் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால். அதிலிருந்து நேற்று டெல்லி அரசு மீண்டுள்ளது.
துணை நிலை ஆளுநருக்கு எந்த விசேஷ அதிகாரமும் கிடையாது என்று கூறி விட்டது உச்சநீதிமன்றம். இதனால் கெஜ்ரிவாலும், ஆம்ஆத்மி கட்சியும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

திட்டங்களை நிறைவேற்ற தீவிரம்
தற்போது முதல்வர் கெஜ்ரிவால் மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளையும், தனது கனவுத் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளார். மேலும் மோடி அரசின் வீண் பிடிவாத செயல்களால் கடந்த 3 வருடங்கள் வீணாகி விட்டதாகவும் கெஜ்ரிவால் காட்டமாக கூறியுள்ளார். சட்டவிரோதமான உத்தரவுகள் மூலமாக டெல்லி அரசை முடக்கிப் போட்டு விட்டது மோடி அரசு என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
தற்போது கெஜ்ரிவால் நிர்வாகத்தை சீர்திருத்த முதலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அதிகாரிகள் முறையாக, ஒழுங்காக தங்களது பணிகளைச் செய்ய வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். அரசுடன் இணைந்து அவர்கள் செயல்பட வேண்டும். அரசின் கொள்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வீடு தேடி வரும் ரேஷன்
கெஜ்ரிவால் அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே பிரச்சினை முற்ற முக்கியக் காரணமே கெஜ்ரிவால் அரசு அறிவித்த ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்தான். தற்போது அது இரண்டையும் தொய்வின்றி செயல்படுத்த கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக 12 திட்டங்கள்
ரேஷன் பொருள் விநியோகம் உள்பட 12 திட்டங்களை முதலில் கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளார். இவற்றை படிப்படியாக நிறைவேற்ற அவர் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்து இவை நிறைவேறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications