மத்திய அரசுப் பணியிலி்ருந்து விருப்ப ஓய்வு பெற்றார் கெஜ்ரிவால் மனைவி
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தான் பார்த்து வந்த வருமான வரித்துறை ஆணையர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
அவர் வருமான வரி முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ஆணையராக கடைசியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் விருப்ப ஓய்வு கோரி நோட்டீஸ் கொடுத்திருந்தார். தற்போது அவருக்கு விருப்ப ஓய்வு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான உத்தரவை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஜூலை 15ம் தேதி முதல் சுனிதாவுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த நோட்டீஸைப் பரிசீலித்து அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் ஜூலை 15 முதல் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு பெற்ற ஒரு வருட காலத்திற்கு வர்த்தக ரீதியிலான பலன் தரும் எந்த வேலையிலும் அவர் சேரக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி சேருவதாக இருந்தால் முறைப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 20 வருடமாக மத்திய அரசுப் பணியில் இருந்து வந்தார் கெஜ்ரிவால். விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதால் அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்கள் முறைப்படி கிடைக்கும்.
கெஜ்ரிவாலுக்கு எதிராக தன்னை மத்திய அரசு பழிவாங்கலாம் என்ற அச்சத்தில்தான் சுனிதா விருப்ப ஓய்வு பெற்று விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் கடந்த 1994ம் ஆண்டு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். 1995ல் அவர் ஐஆர்எஸ் எனப்படும் வருவாய்ப் பணியில் இணைந்தார்.
இவரது கணவர் கெஜ்ரிவாலும் கூட ஒரு ஐஆர்எஸ் அதிகாரிதான். இவர் அன்னா ஹஸாரே இயக்கத்தில் இணைவதற்கு முன்பே தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications