பீகார் சகோதர சகோதரிகளே உங்கள் ஓட்டு நிதீஷ்குமாருக்கே... டிவிட்டரில் கெஜ்ரிவால் வாக்குசேகரிப்பு
டெல்லி: பீகார் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு வாக்களித்து அவரை மீண்டும் அம்மாநில முதல்வராக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் லாலுவின் ராஸ்டிரிய ஜனதா தளம், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திர குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, மாஞ்சியின் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘நிதிஷ் குமாருக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பீகாரில் வாழும் சகோதர, சகோதரிகளே உங்கள் ஓட்டுக்களை நிதிஷ்குமாருக்கே அளித்து மீண்டும் அவரை பீகார் முதல்வராக்குங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலின் இந்த பதிவிற்கு நிதிஷ்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘உங்களது ஆதரவுக்கும், ஆசிக்கும் நன்றிகள் கெஜ்ரிவால் ஜி' என்று கூறியுள்ளார்.