300 மி.லி. மது குடித்த 8 வயது கேரளச் சிறுவன் பலி
திருவனந்தபுரம்: தந்தையின் பீரோவில் இருந்த மதுவை அளவுக்கதிகமாக குடித்த 8 வயது கேரளச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
கேரள மாநிலம் குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன், பெற்றோர் வெளியில் சென்றிருந்ததால், வீட்டில் தனிமையில் இருந்துள்ளான். அப்போது எதேச்சையாக, அவனது அப்பா பீரோவில் மறைத்து வைக்கப் பட்டிருந்த மது பாட்டில் அவனது கண்களில் பட்டுள்ளது.
ஆர்வக் கோளாறில் மதுவைக் குடிக்க ஆரம்பித்துள்ளான் சிறுவன். பின், மதுவின் சுவைக்கு அடிமையாகி 300 மிலி அளவு மது அருந்தியுள்ளான். அதிகப் படியான மது அருந்தியதால் தன் நினைவை இழந்துள்ளான்.
மாலை வீட்டிற்கு திரும்பிய அவனது பெற்றோர், மகனது நிலை கண்டு பதறி உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மருத்துவர்கள் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதே சிறுவனின் மரணத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளதாம். மேலும், சிறுவனின் தந்தைக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும், அவரது நண்பர் பரிசாக அளித்த மது பாட்டிலை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications