ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கிறது கேரள காங். அரசு!
திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கேரள காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
கன்னூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக பணியாற்றியவர் மனோஜ். கடந்த 1ம்தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வந்திருந்த நிலையில் இக்கொலை நடந்தது.
இதையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கேரளாவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தொடர்ந்து இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கொலைகள் கேரளாவில் நடப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தொலைபேசி மூலம் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா "ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் சதி அடங்கியுள்ளதாக கேரள டிஜிபி என்னிடம் அறிக்கை அளித்துள்ளார். எனவே விசாரணை வரம்பு அதிகம் என்பதை கணக்கில் கொண்டு, இந்த கொலை வழக்கை சிபிஐயிடம் அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்" என்றார்.
பொதுவாக மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி அரசு இருந்தால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாநில அரசுகள் பரிந்துரைக்கும். அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்பதை மாநில அரசுகள் தவிர்த்துவிடும். ஆனால், கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், மத்தியில் பாஜகவும் ஆட்சியில் உள்ள போதிலும் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கேரளா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications