மகளின் தற்கொலைக்குக் சீனியர் வீராங்கனைகளே காரணம்- தாயார் புகார்
திருவனந்தபுரம்: ஆலப்புழா சாய் பயிற்சி மையத்தில் துடுப்பு படகு வீராங்கனை தற்கொலைக்கு சீனியர் வீராங்கனைகளே காரணம் என்று மாணவியின் தாய் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலாவிடம் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) நீர் விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த 4 வீராங்கனைகள் விஷகாய் தின்று தற்கொலைக்கு முயற்சித்தனர். இதில் அபர்ணா என்ற வீராங்கனை உயிரிழந்தார், மற்ற 3 வீரங்கனைகளுக்கு ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் இங்குள்ள மூத்த வீரர்களின் துன்புறுத்தலே வீராங்கனைகளின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் ஐஜி எம்.ஆர்.அஜீத்குமார் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்திய விளையாட்டு துறை அமைச்சகமும் விசாரணை நடத்தி வருகிறது.
பெற்றோர்களுக்கு ஆறுதல்
இந்நிலையில் சாய் இயக்குனர் ஜெனரல் இன்ஜிதி ஸ்ரீனிவாஸ் நேற்று முன்தினம் விமானம் மூலம் கொச்சி வந்தார். ஆலப்புழா மருத்துவகல்லூரிக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் வீராங்கனைகளை பார்த்தார். அவர்களின் பெற்றோரையும் சந்தித்து பேசினார்.
ரூ.5 லட்சம் நிவாரணம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘3 வீராங்கனைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீராங்கனைகளுக்கு எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர். அபர்ணா குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். அவரது தாய்க்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
உள்துறை அமைச்சர்
இந்நிலையில் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு சென்று வீராங்கனைகளை பார்த்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வீராங்கனைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அபர்ணாவின் தாயார் புகார்
பின்னர் அபர்ணாவின் வீட்டிற்கு சென்றார். அபர்ணாவின் தாய், சென்னித்தலாவிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அதில், ‘எங்கள் மகள் தற்கொலைக்கு சீனியர் வீராங்கனைகள் தான் காரணம். அவர்கள் மன ரீதியாக துன்புறுத்திவந்ததாக அபர்ணா எங்களிடம் கூறினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். சீனியர் வீராங்கனைகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து சர்ச்சைக்குறிய சாய் பயிற்சி நிறுவனம் ஒருவார காலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications