சிகிச்சைக்காக மனைவியுடன் அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்
மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன் அமெரிக்கா சென்றார்.
திருவனந்தபுரம்: தன்னுடைய உடல்நல சிகிச்சைக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,மனைவியுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், பினராயி விஜயனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை அப்போலோவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறப்பு சிகிச்சை
சிகிச்சையின்போது, அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற வேண்டும் என அப்போலோ மருத்துவர்கள் பினராயி விஜயனிடம் தெரிவித்திருந்தனர். அதற்காக அமெரிக்கா செல்லவும் கடந்த மாதம் தயாராக இருந்தார்.
இயல்பு நிலை
ஆனால் அந்த சமயத்தில்தான் கேரளாவில் வெள்ளம் வந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதனால் மாநில மக்களின் நிலையை உணர்ந்த பினராயி விஜயன் அமெரிக்கா போவதை தள்ளி வைத்தார். கேரளாவை மீண்டும் பழையபடி இயல்பு நிலைக்கு கொண்டு வர பெரும் சிரமம் எடுத்துகொண்டார். அதன்படி தற்போது அம்மாநிலமும் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஆளுநருடன் ஆலோசனை
இதையடுத்து, செப்டம்பர் 3-ம் தேதி அதாவது நாளை மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். அதற்காக கேரள ஆளுநர் சதாசிவத்தை நேரில் சந்தித்து, மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.
3 வாரங்கள் தங்கி சிகிச்சை
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று பினராயி விஜயன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.அவருடன் அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கியிருந்து முதல்வர் சிகிச்சை பெறுகிறார் என கூறப்படுகிறது. பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.