பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் தாக்கப்பட்ட பெண்ணுக்கு கேரள முதல்வர் நேரில் ஆறுதல்

பெங்களூரில் கடந்த 19-ந்தேதி வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவர் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றபோது, மர்ம மனிதனால் சரமாரியாக தாக்கப்பட்டார். அரிவாள் வெட்டு விழுந்ததில் மயங்கி விழுந்த பெண் அதிகாரி ஜோதி உதய் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏ.டி.எம். மையத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.டி.எம். மையத்தில் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர்.
இந்த தகவல் அறிந்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் ஒரு திருமண விழாவில் பங்கேற்க பெங்களூர் சென்றார். விமான நிலையத்தில் இறங்கியதும், அவர் நேராக வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முதல்வர் உம்மன் சாண்டியை கண்டதும் வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி கூறினார். எனக்கு நடந்த தாக்குதலால் நிலை குலைந்து போனேன். என்றாலும் தளராத நம்பிக்கையுடன் உடல்நலம் தேற போராடுகிறேன். எனது 3 வயது மகளை பற்றிதான் கவலையாக உள்ளது என்று உம்மன்சாண்டியிடம் அவர் கூறினார்.
அவருக்கு நம்பிக்கையூட்டிய உம்மன்சாண்டி, விரைவில் உடல் நலம் தேறி நலமடைவீர்கள். இதற்காக நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்களை தாக்கியவரை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்நாடகா உள்துறை மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று கூறினார்.
மேலும் ஜோதி உதய்க்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரியின் முதன்மை டாக்டர் வெங்கட்ட ரமணாவிடமும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார். ஜோதி உதய்யின் கணவர் உதயகுமாருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு வங்கி அதிகாரி தாக்கப்பட்டதை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் காவலாளிகள் இல்லாத மற்றும் கண்காணிப்பு கேமிரா பொருத்தாத ஏ.டி.எம்.க்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டன.
அரசு அறிவித்த இந்த உத்தரவு காரணமாக பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 1,450 ஏ.டி.எம்.க்கள் மூடப்பட்டன. இவற்றிற்கு கண்காணிப்பு காமிரா பொருத்த நவம்பர் 26-ந்தேதி வரை போலீசார் கெடு விதித்து இருந்தனர். வங்கி அதிகாரிகள் இக் காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கண்காணிப்பு காமிரா பொருத்த மேலும் 45 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications