சிறுநீர்ப் பையை கையில் பிடித்தபடி ரூபாய் நோட்டை மாற்ற வந்த முதியவர்
சிறுநீர்ப் பையைக் கையில் பிடித்தபடி செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வந்த கேரள முதியவரால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலப்புழா: சிறுநீரகத் தொற்று பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கேரள முதியவர், சிறுநீர் சேகரிக்கும் பையை ஏந்தியபடி, செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கு வந்து வரிசையில் காத்திருந்தது இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். 67 வயதாகும் இவர் கடந்த 12 வருடமாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். 24 மணி நேரமும் இவர் சிறுநீரை சேகரிக்கும் பையுடன்தான் நடமாடுகிறார். இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த அறிவிப்பால் ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தார்.
தன்னிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயற்சித்தார். ஆனால் வங்கிக்கு நேரில் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால் இவர் பரணிக்காவு கோயிக்கல் கிளை பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்றார். சிறுநீர்ப் பையுடன் அவர் வங்கிக்கு வந்து வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றினார். சிறுநீர்ப் பையையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவர் பெரும் அவஸ்தையுடன் காத்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
சாதாரண பொதுமக்களை மத்திய அரசின் இந்த ரூபாய் ஒழிப்பு எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இது உள்ளது.
An Old man spotted standing in ATM queue with his urine bag. Pic from Kerala pic.twitter.com/jhaT5xiJiE
— St.sinner (@retheeshraj10) November 18, 2016