மதுபான பார்கள் மூடப்படுவதால் 'கள்'ளுக்குத் தாவும் கேரளத்தினர்: விவசாயிகளுக்கு கொண்டாட்டம்
திருவனந்தபுரம்: மது விற்பனை பார்களை மூடும் கேரள அரசின் முடிவால், பாரம்பரியமான கள்ளுக்கு அம்மாநிலத்தில் தேவை அதிகரித்துள்ளது. மண் கலயங்களை கழுவி வைக்க ஆரம்பித்துள்ளனர் கேரள சேட்டன்கள்.
பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து எடுக்கப்படும் கள் கேரளாவில் மது தேவையை நெடுங்காலமாக பூர்த்தி செய்து வந்தது. மதுபான தொழிற்சாலைகளின் நெருக்கடியால் இயற்கையான கள் விரட்டியடிக்கப்பட்டு மதுபானக் கடைகள் முளைத்தன.

சபாஷ் கேரளா
இந்நிலையில்தான் மதுபான கடைகளை ஒழிக்க கேரள அரசு துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. புதிய மதுபான கொள்கையை அறிவித்து அதன் மூலமாக இந்த அறிவிப்பை சாத்தியப்படுத்துகிறது கேரள அரசு. ஆண்டுக்கு 10 சதவீத பார்களை மூடுவதன் மூலம், 2023ம் ஆண்டு அக்டோபர் 2ம்தேதிக்குள் முழுமையாக பார்களை மூட கேரள அரசின் மதுபான கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கள் இறக்க ஆள் இல்லை
கேரளாவில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து எடுக்கப்படும் கள் விற்பனை படிப்படியாக குறைவதற்கு, அதிகப்படியான மதுபான கடைகளும் ஒரு காரணம். இது தவிர, கள் இறக்குவதில் மற்றும் விற்பனையில் சுத்தமற்றதன்மை, கள் இறக்க ஆட்கள் கிடைக்காமை போன்றவற்றாலும் கள் விற்பனை குறைந்தது.

விலை குறைவு
கேரளாவில் இப்போதும் கூட 5 ஆயிரத்து 194 கள் கடைகள் இயங்குவதாக கலால்துறை புள்ளி விவரம் கூறுகிறது. 24,794 கள் இறக்கும் தொழிலாளர்கள் கேரளாவில் உள்ளனர். காலை மற்றும் மாலையில் ஒரு தென்னை மர குரூப்பில் இருந்து 1.5 லிட்டர் கள் இறக்க முடியும். இந்த கள்ளானது 750 மில்லி ரூ.50 என்ற விலையில் விற்பனையாகிறது.

பனை மரங்களை காப்போம்
பனை மரத்தை பொறுத்தளவில் நாள் ஒன்றுக்கு ஒரு குரூப் பனை மரத்தில் இருந்து 40 லிட்டர் கள் இறக்க முடியும். ஒரு பாட்டில் பனை கள் ரூ.40க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. பனை மரங்கள் வெட்டப்பட்டு வீழ்த்தப்பட்டு வருவதால் அதில் இருந்து கள் இறக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பனை மரங்களை காக்கும் பிரச்சாரத்தை, கேரளாவில் தற்போது இயக்கங்கள் பல முன்னெடுக்கின்றன.

உடலுக்கு கள் நல்லது
கோட்டயத்தை சேர்ந்த 75 வயது குன்ஜுமா மாத்யூ கூறுகையில், "மண் கலயங்களை கழுவி சுத்தப்படுத்தி கள் இறக்கினால் எனது சாய்ஸ் கள்ளாகத்தான் இருக்கும். ஏனெனில் கள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது என்று எனது பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர். நான் சுமார் 25 ஆண்டுகள் கள் குடித்துள்ளேன். பனை மரத்திற்கு தென்னையை பராமரிப்பது போல செலவு பிடிக்காது என்பதால் பனைகளை அதிகம் வளர்த்து பாதுகாத்தால் உரிமையாளர்கள் நல்ல லாபம் பார்க்கலாம். கள் இறக்குவதில் சுத்தம் பராமரிக்கப்பட வேண்டும்" என்று தனது ஆசையை தெரிவித்தார்.

கேரளா ஊக்கம் தர வேண்டும்
பத்தினம்திட்டாவை சேர்ந்த ரப்பர் தொழிலாளி ஜேக்கப் கூறுகையில் "நான் முதலில் கள்தான் குடித்து வந்தேன். கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதால் நான் மதுவுக்கு மாறினேன். கள் உற்பத்திக்கு கேரளா நல்ல ஊக்கம் தந்தால் கள் குடிக்கும் பழக்கத்துக்கே நான் மீண்டும் செல்வேன். விவசாயிகள், உடல் நலம், பணம் போன்ற பல கோணங்களில் கள்தான் மிகச்சிறந்த ஊக்க பானம்" என்றார். கள் இறக்கும் தொழில் சூடு பிடிப்பதால், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பனையேறும் தொழிலாளர்கள் கேரளா பக்கம் வேலை தேடி இடம் பெயர தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications