சி.பி.எஸ்.இ உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளம் கட்டாயம்: கேரள அரசு அவசர சட்டம்
திருவனந்தபுரம்: சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகள், சுய நிதி கல்வி நிறுவனங்கள், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடப்பிரிவு கற்றுத்தரும் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் பிளஸ்டூ வரை மலையாளம் கட்டாயம்.

இப்படி ஒரு அவசர சட்டத்தை கொண்டுவர சில தினங்கள் முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றார் முதல்வர் பினராயி விஜயன். அவசர சட்டத்திற்கு ஆளுநர் சதாசிவம் இன்று கையெழுத்திட்டுள்ளார். எனவே இந்த கல்வியாண்டு முதலே சட்டம் அமலுக்கு வந்துவிடும். அதிகாரப்பூர்வமாக மே 1ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாக அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதாகவும், மலையாளம் பேசுவது தடை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களை தொடர்ந்து கேரள அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு மிக அதிக அளவு அபராதம் விதிக்கப்படும். மலையாளத்தில் பேசக்கூடாது என உத்தரவு பிறப்பிப்பது, போர்டுகளில் எழுதி வைப்பது இனிமேல் இருக்க கூடாது. மலையாளம் பேசாத, மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வகை செய்கிறது.
தமிழகத்திலும் இதேபோல தமிழ் மொழி காக்கும் நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசு எடுக்குமா? அல்லது இடைத் தேர்தல்கள், ஐடி ரெய்டுகளில் பிஸியாக இருக்குமா என்பதை காலம்தான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications