"ஈழவா" மடாதிபதி சுவாமி சாஸ்வதிகானந்தா மர்ம மரணம் குறித்து மறு விசாரணைக்கு கேரளா உத்தரவு!
திருவனந்தபுரம்: ஈழவா சமூகத்தின் சிவகிரி மடாதிபதியாக இருந்த சுவாமி சாஸ்வதிகானந்தா மர்ம மரணம் குறித்து மறுவிசாரணைக்கு கேரளா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஈழவா சமூகத்துக்காக சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு அமைத்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன பீடம் யோகத்தின் சிவகிரி மடாதிபதியாக இருந்தவர் சுவாமி சாஸ்வதிகானந்தா. 1900களில் இந்த சிவகிரி மடத்தின் அதிகாரத்தை மதுபான தொழிலதிபர் வெள்ளாபள்ளி நடேசன் உதவியுடன் கைப்பற்றினார் சுவாமி சாஸ்வதிகானந்தா.

பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி சாஸ்வதிகானந்தா முல்லைப் பெரியாறில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதன் பின்னர் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன பீடம் யோகத்தின் தலைவராக வெள்ளாபள்ளி நடேசன் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் கேரளாவில் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன பீடம் யோகமும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து 3வது அணியாக களமிறங்கும் என வெள்ளாபள்ளி நடேசன் அறிவித்தார். இதற்காக பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரையும் அவர் சந்தித்தார்.
இந்த வியூகத்தை வகுத்தது தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தி. இதுநாள் வரை ஸ்ரீ நாரயண தர்ம பரிபாலன் பீட யோகத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்த ஈழவர்கள் இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்தவர்கள். தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஈழவர்களை வெள்ளாபள்ளி நடேசன் திருப்பிவிடுவது இடதுசாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதன் எதிரொலியாக கிளப்பிவிடப்பட்டது சுவாமி சாஸ்வதிகானந்தாவை வெள்ளாபள்ளி நடேசன் படுகொலை செய்தார் என்பது. இதனால் சுவாமி சாஸ்வதிகானந்தா மரணம் குறித்து மறுவிசாரணை நடத்தவும் இடதுசாரிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் தொடக்கத்தில் இந்த கோரிக்கையை நிராகரித்து வந்த கேரளா அரசு தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த விசாரணை உத்தரவு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications