புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மரியாதை... புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தது கேரள அரசு
ஓகி புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் : ஓகி புயலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி ஓகி புயல் வீசியபோது கேரளாவில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலில் சிக்கி கேரள மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மாயமானார்கள். இதுவரை 75க்கும் மேற்பட்ட மீனவர்கள் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கானோரின் கதி என்னவென்று தெரியவில்லை.
இதனால் பல கேரள மீனவகிராமங்கள் சோகத்தில் முழ்கி கிடக்கின்றன. இந்நிலையில் கேரள கடற்கரைகளில் எப்போதும் கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்ட நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்களும் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடற்கரைகளில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஓகி புயல் பாதிப்பால் மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினரின் அழுகுரல் இன்னும் கேட்டுக்கொண்டிருப்பதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கேரள அரசு, புத்தாண்டு அன்று மீனவர்களுக்கு கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறியுள்ளது.