செத்தாலும் இங்க போய் சாகனும் பாஸ்...!
திருவனந்தபுரம்: கடவுளின் சொந்த பூமி என்று கேரளாவை வர்ணிப்பார்கள். அதன் அழகிய மலைத் தொடர்கள், பச்சைப் பசேல் காட்சிகள், வனங்கள், கடற்கரைகள் என பல கவர்ச்சிகரமான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் அதற்கு இப்படி ஒரு செல்லப் பெயர்.
இந்தியாவிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல லட்சம் பேர் கேரளாவுக்கு வருகை தருகிறார்கள். அதன் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. தொழில் திட்டங்களை விட சுற்றுலாதான் பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.
இந்த நிலையில் நீண்ட நாள் வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை இங்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் இதுதொடர்பான சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

சமூக இயக்கமாக...
இதுகுறித்து பிரபல புற்றுநோய் மருத்துவர் வி.பி. கங்காதரன் கூறுகையில், 'தற்போது நீண்ட நாள் வியாதிகளுக்கு சிகிச்சை தருவது சமூக இயக்கமாக கேரளாவில் நடந்து வருகிறது. சிபிஎம் கட்சியும் இதில் இணைந்துள்ளது. முடிந்தவரை தங்களது இயக்கத்தினரை இதுபோன்ற சிகிச்சை மையங்களை அமைக்க அது உத்தரவிட்டுள்ளது.

பாராட்டு...
இங்குள்ள மருத்துவ வசதிகளையும், மருத்துவமனைகளையும், அடிப்படைக் கட்டமைப்புகளையும் சிங்கப்பூரைச் சேர்ந்த லியன் பவுண்டேஷனி் நிறுவனம் பார்த்து பாராட்டியுள்ளது. கேரளாவில் அடிப்படை மருத்துவ சுகாதாரம் சிறப்பாக உள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது. மேலும் டீம் ஒர்க்கும் இதில் முக்கியமானது என்கிறார்.

கட்டமைப்பு...
திருவல்லாவில் புஷ்பகிரி மருத்துவமனையை வைத்துள்ள ஏ.சி.குரியன் கூறுகையில், ‘அடிப்படை கட்டமைப்பு வசதியால்தான் இது சாத்தியமாற்று. எங்களது குழுவில் 4 டாக்டர்கள், 10 நர்ஸ்கள் உள்ளனர். ஒரு வார்டு உள்ளது. சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இங்கு சிகிச்சை அளிக்கிறோம்.

தன்னார்வத் தொண்டர்கள்...
மேலும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழக்கும் நபரின் குடும்பத்தினருக்கும் நாங்கள் உதவி செய்கிறோம். இதை டீம் ஒர்க்காக செய்வதால் இது சாத்தியமாயிற்று. எங்களிடம் நிறைய தன்னார்வத் தொண்டர்களும் உள்ளனர் என்றார்.

மார்பின் பொருள்...
இந்தியாவில் மார்பின் பொருளை நீண்ட நாள் வியாதிகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்தத் தடை உள்ளது. இருப்பினும் ஐந்து மாநிலங்களில் மட்டும் இதற்கு விதி விலக்கு உண்டு. அதில் கேரளாவும் ஒன்றாகும்.

அமைதியான முறையில்...
வாழ்க்கையின் கடைசி காலத்தில் உள்ளவர்களுக்கு இங்கு வலியை மறக்கவும், வாழ்க்கை முறையை சற்று மேம்படுத்தவும் இந்த மருத்துவமனைகளில் உதவுகிறார்கள். அமைதியான முறையில் மரணத்தை சந்திக்க அவர்கள் வழி ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பது முக்கியமானது.

40வது இடத்தில் இந்தியா...
இதுபோன்ற சிகிச்சை முறையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவும், 3வது இடத்தில் நியூசிலாந்தும் உள்ளன. இந்தியா இதில் 40வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்வதற்கு மட்டுமல்ல சாவதற்குக் கூட அழகான இடம்தான் கேரளா.












Click it and Unblock the Notifications