கேரளாவில் சாத்து, சாத்துன்னு பேய்மழை... கல்லார்குட்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
Recommended Video
இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லார்குட்டி அணையின் ஒரு ஷட்டர் திறந்துவிடப்பட்டுள்ளது
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் பொய்த்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருவதால், 3 வது நாளாக இன்றும் கேரளாவின் பல பகுதிகளில் கனமழை சாத்தி வருகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், இடுக்கி மாவட்டத்தில் கல்லார்குட்டி, பம்ப்லா, மலங்கரா அணைகள், எர்ணாகுளம் மாவட்டத்தில் பூதத்தான்கெட்டு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், பெரியார் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரியார் ஆற்றின் கரையோரத்திலும் அதன் துணை ஆறுகளின் கரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் எட்டுமனூர்-பீருமேடு சாலையில் மழையினால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் மலைப் பாதைகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதி மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் சில இடங்களில் 14 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. ஜூலை 22 வரை இடுக்கி மற்றும் கோழிக்கோடு வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 20 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications