கேரளாவில் மாவோயிஸ்ட் – போலீசார் கடும் துப்பாக்கிச் சண்டை... பதற்றம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வயநாடு பகுதிக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைந்துள்ளதாக, உளவுத்துறை கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வெள்ளமுடா அருகே உள்ள சப்பா பழங்குடிகள் காலனி பகுதிக்குள் நேற்று போலீசார் சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டதில், மாவோயிஸ்ட்டுகள் அங்குள்ள வனப்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்பாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, வயநாடு மாவட்டம், வெள்ளமுண்டா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது, சிறப்பு படைகள் (தண்டர்போல்ட்) வெள்ளமுண்டா வனப்பகுதிக்கு அனுப்பப்படுள்ளன என்றும் கூறியுள்ளார்.
''அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் யாரும் கவலையடைய தேவையில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றும் கேரள உள்துறை அமைச்சர் சென்னிதலா கூறியுள்ளார். முதற்கட்ட அறிக்கையில் எவ்வித உயிரிழப்புகளும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.