’ஜெயிலர்’ வில்லன் விநாயகன் மீது 3 ஆண்டு ‘ஜெயில்’ தண்டனை கிடைக்கும் பிரிவுகளில் கேரளா போலீஸ் வழக்கு!
எர்ணாகுளம்: ஜெயிலர் திரைப்பட வில்லன் நடிகர் விநாயகன், போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உடனேயே விடுதலை செய்திருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது நடிகர் விநாயகன் மீது 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழ் கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விநாயகன், ரஜினிகாந்த் நடித்து அண்மையில் ஹிட்டடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இதற்கு முன்னரே விநாயகன் அறிமுகமாகி இருந்தாலும் ஜெயிலர் திரைப்படம்தான் விநாயகனுக்கு தமிழ்நாட்டில் பெயரை பெற்றுத் தந்தது.

சர்ச்சைகளின் நாயகன்: கேரளாவைப் பொறுத்தவரையில் நடிகர் விநாயகன் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர், பாஜக, காங்கிரஸுக்கு எதிராக, இடதுசாரிகளின் ஆதரவாளராக செயல்படுகிறவர். தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்.
குடிபோதையில் தகராறு- கைது: இந்த நிலையில் தாம் குடியிருக்கும் அப்பார்மெண்ட் வாசிகளுடன் நடிகர் விநாயகனுக்கு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக எர்ணாகுளம் காவல்நிலையத்துக்கு சென்றார் நடிகர் விநாயகன். அங்கு போலீசாருடன் விநாயகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தார் என கூறப்படுகிறது. அப்போது விநாயகன், மது போதையில் இருந்தார் எனவும் போலீசார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து கைதும் செய்தனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உடனடியாக விநாயகன் ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கொந்தளிப்பு: இந்த விவகாரத்தை தற்போது காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. திரிக்காகர காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், விநாயகன் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்பதால் அவர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமல் உடனே ஜாமீனில் விடுதலை செய்துவிட்டனர் போலீஸ் என குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் இதனை கேரளா போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை: இது தொடர்பாக கொச்சி டிசிபி சசிதரன் கூறுகையில், எந்த நபருடைய செல்வாக்குக்கும் போலீஸ் உடன்படவில்லை. கேரளா போலீஸ் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளின் கீழான குற்றம் உறுதி செய்யப்பட்டால் நடிகர் விநாயகனுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். போலீஸ் அதிகாரிகளை விநாயகன் தாக்க முயன்றதற்கு ஆதாரங்கள் இதுவரை இல்லை. எர்ணாகுளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. இதில் போலீசாரை விநாயகன் தாக்க முயற்சித்தது உறுதியானால் மேலும் சில பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றார்.
ஜெயிலர் வில்லனுக்கு ஜெயில்!












Click it and Unblock the Notifications