50 ஆயிரத்திற்கு மூக்கு கண்ணாடி வாங்கிய சபாநாயகர்.. கேரளா அரசு பணத்தில் நடந்த கொள்ளை!
கேரள சட்டசபை சபாநாயகர் மூக்கு கண்ணாடி வாங்க 50 ஆயிரம் செலவு செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: அரசியல் தலைவர்கள் மக்கள் வரிப்பணத்தில் சாதாரண பொருட்களை கூட அதிக விலைக்கு வாங்கி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். பொதுவாக கேரளாவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகவும் குறைவு.
ஆனால் தற்போது எல்லாவற்றிற்கும் சேர்த்து பெரிய குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கேரள சட்டசபை சபாநாயகர் மூக்கு கண்ணாடி வாங்க 50 ஆயிரம் செலவு செய்துள்ளார்.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த செலவு குறித்து அவர் வித்தியாசமான விளக்கமும் கொடுத்துள்ளார்.
என்ன விதி
கேரளா அரசு விதியின் படி அங்கு இருக்கும் எம்.எல்.ஏக்கள் அரசு பணத்தில் மருத்துவ செலவு செய்து கொள்ளலாம். அதேபோல் அவர்களது நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கும் செலவு செய்யலாம். இதற்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து தனி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பிரச்சனை
இந்த மருத்துவ நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இதனால் வி. பினு என்பவர் இதுகுறித்து கண்டுபிடிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதுவரை யாருக்கு எவ்வளவு மருத்துவ செலவு செய்யப்பட்டு இருக்கிறது என்று கேட்டார்.
பெரிய பிரச்சனை
இதன் மூலம் கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் 50000 ரூபாய்க்கு மூக்குக்கண்ணாடி வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 45000க்கு கண்ணாடியும், 5000 க்கு பிரேமும் வாங்கி இருக்கிறார். கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா 28 ஆயிரத்திற்கு கண்ணாடி வாங்கியுள்ளார்.
என்ன பதில்
இதற்கு தற்போது இவர் பதில் அளித்துள்ளார். அதில் ''எனக்கு கண்பார்வை மிகவும் மோசமாக இருந்தது. கண் உறுத்திக் கொண்டே இருந்தது. எனவே டாக்டர் நல்ல கண்ணாடி போட சொன்னார். அதனால்தான் இது வாங்கினேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.