சிறுபான்மையினர் இடஒதுக்கீடு கோரும் கேரளா தமிழ் பிராமணர்கள்- ஹர்திக் படேலுடன் கை கோர்ப்பு!
திருவனந்தபுரம்: கேரளா வாழ் தமிழ் பிராமணர்கள் தங்களை சிறுபான்மையினர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் படேல் சமூகத்தின் ஹர்திக் படேலுடன் கை கோர்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டம் நாடு முழுவதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் தமிழ் பிரமாணர்களின் அமைப்பு தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என கோருகிறது.

இது குறித்து கேரள பிராமணர் சபா துணைத் தலைவரான கரிம்புழா ராமன் கூறியதாவது:
குஜராத்தின் ஹர்திக் படேலிடம் எங்களது இடஒதுக்கீடு போராட்டம் குறித்து ஆலோசித்துள்ளோம். நவம்பர் மாதம் நடைபெறும் எங்கள் சபா கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்.
பிற சமூகத்தினர் பெறும் இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. எங்களுக்கு வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் கேட்கிறோம். எங்கள் சமூகத்தினர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் சிறுபான்மையினராக எங்களைக் கருத வேண்டும்.
எங்கள் சமூகத்தினருக்கும் மாநில அரசு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் காலகாலமாக இடஒதுக்கீடு சலுகையை நீட்டித்து அளித்துவிட்டு மற்றவர்களுக்கு அதை முற்றிலுமாக மறுப்பது என்பது சரியானது அல்ல.
அரசியல் ஆதாயங்களுக்காகவே இடஒதுக்கீடு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு கரிம்புழா ராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications