ஜனநாயகத்திற்கான முக்கிய போர்... பரபரப்பை கிளப்பிய பிரசாந்த் கிஷோரின் ஒற்றை ட்வீட்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை ஜனநாயகத்திற்கான முக்கிய போர் என்று குறிப்பிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், வங்கத்திற்கு அதன் சொந்த மகளே தேவை என்றும் பதிவிட்டுள்ளார்,
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தமிழகம், புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் மேற்கு வங்க மாநிலத்திற்கு அதிகபட்சமாக எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 27, ஏப்ரல் 1, 6,10,17,22,26 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க தேர்தல் குறித்து பிரபல ஆலோசகரும் ஐபோக் நிறுவனத்தின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில், "இந்தியாவில் ஜனநாயகத்திற்கான முக்கிய போர்களில் ஒன்று மேற்கு வங்கத்தில் நடைபெறுகிறது.
வங்காள மக்கள் தங்கள் முடிவுகளுடன் தயாராக இருக்கிறார்கள். சரியான இடத்தில் அவர்கள் தங்கள் முடிவுகளைக் காட்டுவார்கள். வங்காளம் அதன் சொந்த மகளை விரும்புகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், தான் முன்பு பதிவிட்ட ட்வீட்டை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் 21ஆம் தேதி பாஜகவை நேரடியாக எதிர்த்து பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்திருந்தார். அதில், "என்னதான் ஊடகங்கள் மிகைப்படுத்திக் கூறினாலும், பாஜகவால் இரட்டை இலக்கு வெற்றியைக் கூட மேற்கு வங்கத்தில் அடைய முடியாது. அப்படி இரட்டை இலக்கை அடைந்துவிட்டால் நான் என் தொழிலைவிட்டு வெளியேறுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில் திமுகவுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்குவதைப் போலவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications