டெல்லியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறிய கே.எப்.சி., சிசிடிக்கு 10 நாட்களுக்குள் மூடுவிழா?
டெல்லி: டெல்லியில் கே.எப்.சி., கபே காபி டே உள்ளிட்ட பிரபல உணவகங்கள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன.
டெல்லியில் கடந்த ஓராண்டில் கே.எப்.சி., சிசிடி(கபே காபி டே) உள்ளிட்ட 100 பிரபல உணவகங்கள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. விதிகளை மீறிய உணவகங்களை மூடுமாறு உத்தரவிட்டும் 90 சதவீத கடைகளை மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் எப்பொழுது எல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கடைகள், உணவகங்களை மூடுமாறு கூறுகிறதோ அப்பொழுது எல்லாம் அந்த கடைகளுக்கு நீர் மற்றும் மின் வினியோகத்தை நிறுத்துமாறு டெல்லி நீர் வாரியம் மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுக்கு உத்தரவிடுகிறது.
டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டும் 90 சதவீத கடைகள், உணவகங்களுக்கு நீர் மற்றும் மின் வினியோகம் துண்டிக்கப்படவில்லை. இந்நிலையில் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஞ்சீவ் குமார் இது குறித்து நீர் வாரிய தலைவர் மற்றும் மின்வாரிய தலைமை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கடைகள், உணவகங்களுக்கு நீர் மற்றும் மின் வினியோகத்தை துண்டிக்குமாறு உத்தரவிட்டும் அது குறித்து எங்களுக்கு எந்தவித அறிக்கையும் வரவில்லை. 1.4.2014 முதல் 30.4.2015 வரையிலான காலத்தில் சில கடைகள், உணவகங்களை மூடுமாறு உத்தரவிட்டும் அதில் 99 சதவீத கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து 10 நாட்களுக்குள் தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இன்னும் 10 நாட்களுக்குள் டெல்லியில் உள்ள கே.எப்.சி., சிசிடி கடைகள் மூடப்படும்.












Click it and Unblock the Notifications