மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட தெலுங்குதேசம் பிரமுகர்கள் 3 பேர் 10 நாட்களுக்கு பின் விடுவிப்பு!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட தெலுங்குதேசம் கட்சியின் பிரமுகர்கள் 3 பேர் 10 நாட்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் மலைப்பகுதியில் 10 நாட்களுக்கு முன்னர் தெலுங்குதேசம் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் 3 பேரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். ஆந்திரா- ஒடிஷா எல்லைப் பகுதியில் இக்கடத்தல் சம்பவம் நிகழ்ந்தது.
அம்மலைப் பகுதியில் பாக்சைட் தாது வெட்டி எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3 பேரையும் மாவோயிஸ்டுகள் கடத்தியதாக கூறப்பட்டது. பாக்சைட் தாது வெட்டி எடுக்கப்படுவதால் மலைகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர் என்பது மாவோயிஸ்டுகளின் வாதம்.
இந்த பாக்சைட் தாது வெட்டி எடுப்பதற்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக மாவோயிஸ்டுகள் 3 பேரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட 3 பேரும் சித்ரகோண்டா வனப்பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகளின் மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 3 பேரும் இனி எதிர்காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேர்ந்து செயல்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.