டெல்லிக்கும் பரவிய முத்தப் போராட்டம்.. ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன் 'இச்' கொடுத்து களேபரம்!
டெல்லி: கேரளாவிலிருந்து கொல்கத்தாவுக்குப் பரவிய கிஸ் ஆப் லவ் போராட்டம் தற்போது டெல்லிக்கும் வந்துள்ளது. டெல்லியில் உள்ள ஆர். எஸ்.எஸ். அலுவலகம் முன்பு கூடிய போராட்டக்காரர்கள் முத்தம் கொடுத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களில் பலரும் மாணவ, மாணவியர் ஆவர். இவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அதற்குள் சிலர் முத்தமிட்டுக் கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்கள் ஜன்டிவாலன் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களைப் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தடுக்கப்பட்ட இடத்திலேயே அவர்கள் முத்தமிட ஆரம்பித்து விட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். மாரல் போலீஸிங் என்ற பெயரில் சுதந்திரத்தைத் தடுப்பதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நேற்று மாலை 7 மணியளவில் இந்தப் போராட்டம் நடந்தது. இருப்பினும் போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.