கேரளா சி.பி.எம். செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் தேர்வு! மாநிலக் குழுவில் 'அச்சுவுக்கு' இடம் இல்லை!!
ஆழப்புழா: கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கொடியேறி பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் முதல்வரான சர்ச்சைக்குரிய அச்சுதானந்தனுக்கு மாநிலக் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் மீது மாநில செயலாளர் பினராய்விஜயன் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறினார்.

மாநாட்டில் நடந்த விவாதத்தில் அச்சுதானந்தன் மீது அடுக்கடுக்கான புகார்களை பட்டியலிட்டார். இதற்கு அச்சுதானந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன் மீது கூறப்பட்ட புகார்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் கட்சி மாநாட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அச்சுதானந்தன் கட்சி மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவரை சமாதானப்படுத்த அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனிடையே அம்மாநில கட்சியின் புதிய செயலாளராக மத்திய குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை செயலாளர் பதவியில் இருந்தவர் பினராய் விஜயன். அவர் 4 முறை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக பதவி வகித்துள்ளார். அவருக்கும் அச்சுதானந்தனுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட மாநில குழு உறுப்பினர்கள் பட்டியலில் அச்சுதானந்தன் இடம் பெறவில்லை. எனினும் 88 பேர் கொண்ட அந்த பட்டியலில் ஒரு இடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அச்சுதானந்தன் கட்சியில் செயலாற்ற திரும்பிவந்தால் அவருக்கு குழுவில் இடமளிக்கும் வகையிலேயே அந்த ஒரு இடம் காலியாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1964 ஆம் ஆண்டு முதன்முதலாக மாநில குழு அமைக்கப்பட்டபோது அச்சுதானந்தன் அதில் உறுப்பினராக இருந்தவர். இதனிடையே அச்சுதானந்தனை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு மத்திய குழுவை கேரளா மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications