கொல்கத்தாவில் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில் புர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் முன்பு திங்கட்கிழமை மாலை குண்டுவெடித்தது.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி தேசிய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் புர்த்வான் கிளை தலைவர் சாஜித் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் முகாமில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் வாசலில் யாரோ வெடிகுண்டை வீசியுள்ளனர். மாலை 6.30 மணிக்கு குண்டுவெடித்தபோதிலும் நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் பற்றி உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை செய்யும் தங்களை குறி வைத்து தான் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று தேசிய புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய புலனாய்வு துறையினர் புர்த்வான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்புடைய 40 வெடிகுண்டுகளை கடந்த மாதம் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.