கொல்கத்தா மருத்துவர் வழக்கு.. தந்தையிடம் டீல் பேசிய போலீஸ்.. காங்கிரஸ் அதிர்ச்சி புகார்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வகையில் அந்த மாநில அரசு மீது காங்கிரஸ் தலைவர் வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை அதிர்ச்சி வழக்கு மேற்கு வங்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தினசரி பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. இது அரசியல் ரீதியாக திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு கட்சியினரும் பரஸ்பரம் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிவருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். மேலும், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் பாஜகவினர் புகார் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது புகார் வைத்துள்ளார். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட மருத்துவரின் வீட்டுக்கு சென்று, அவரின் பெற்றோரிடம் நீண்ட நேரம் உரையாடினேன். காவல்துறை அவர்களை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது.
காவல்துறை அவர்களை வீட்டை விட்டு வெளியில் வரக்கூட அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களால் எந்தப் பணியும் செய்ய முடிவதில்லை. வீட்டை சுற்றி பேரிகார்டுகளை அடுக்கியுள்ளனர். காவல்துறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதன்படிதான் காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது. இது மட்டுமல்ல, தங்களது மகளின் உடலை உடனடியாக எரிப்பதற்கு, மாணவியின் தந்தைக்கு பணம் கொடுக்கிறோம் என்று சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு தாமதமில்லாமல், உங்கள் மகளின் உடலை எரியூட்ட வேண்டும் என்று கொல்கத்தா போலீஸ் அவர்களை எச்சரித்துள்ளது. நான் ஆர்.ஜி மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் பேச முயற்சித்தேன்.
ஆனால் காவல்துறை என்னை அனுமதிக்க முடியாது என தடுத்துவிட்டது. நான் அரசியல் கட்சி தலைவராக அங்கு செல்லவில்லை. ஒரு சாதாரண குடிமகனாக, போராடிவரும் மருத்துவர்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்து சில வார்த்தைகள் பேசலாம் என்றுதான் சென்றேன்.
இதற்கு கூட காவல்துறை மறுக்கிறது. காவல்துறை இதே கறார் நடவடிக்கையை ஏன் முன்பே எடுக்கவில்லை. அப்படி அவர்களின் கடமையை சரியாக செய்து, நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நேரம் நம் சகோதரிக்கு அப்படி எதுவும் நடந்திருக்காதே."என்று கூறியுள்ளார். செளத்ரியின் இந்த கருத்து அங்கு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்க காவல்துறையின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும் எழுந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications