கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு! குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை என்ன? நாளை அறிவிப்பு
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில் அவருக்கான தண்டனை விவரங்களை சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் நாளை (ஜனவரி 20) வழங்குகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயங்கள் இருந்தன.

கழுத்து நெரிக்கப்பட்டதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளியை கைது செய்யக் கோரி மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தொடங்கி 57 நாட்கள் முடிவடைந்த நிலையில் ஜனவரி 18ஆம் தேதியான நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.
நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பை வாசித்தார். அதில் சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி. அவருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனையும் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் என தெரிவித்திருந்தார்.
அப்போது அங்கிருந்த சஞ்சய் ராய், "நான் இதை செய்யவில்லை, இதை செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேட்டார். அது போல் இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐயோ வழக்கில் ஒரே குற்றவாளிதான் என கூறி வருகிறது.
இந்த நிலையில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications