கிருஷ்ண ஜெயந்தி... தொடர் விடுமுறை திருமலையில் பக்தர்கள் குவிந்தனர்
தொடர் விடுமுறையை முன்னிட்டு திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர்.
திருமலை : இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க நாடுமுழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வாடிக்கை.
சனி, ஞாயிறு அதைத் தொடர்ந்து திங்கள்கிழமையும் கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 15 சுதந்திரதின விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர் கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 20 அறைகளும் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் ஏழுமலையானை தரிசிக்க 16 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மலைப் பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்துக்கும் 3 மணி நேரம் வரை ஆகிறது.
இலவச தரிசனத்திற்கு வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி ஆழ்வார் ஏரியை சுற்றி உள்ள வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.