காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை: கே.ஆர்.எஸ் அணை நிரம்பி, தண்ணீர் தமிழகம் வருகிறது
பெங்களூர்: நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்திலுள்ள, கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 110 அடியை எட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா அருகே காவிரி ஆற்றுக்கு குறுக்காக கிருஷ்ணராஜசாகர் அணை (கேஆர்எஸ்) அமைந்துள்ளது. இந்த அணைதான், தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கி முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதோடு, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்றைய காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 508 கனஅடி தண்ணீர் உள்ளே வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 825 கனஅடி தண்ணீர் வெளியே திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இதேபோல மழை தொடர்ந்து பெய்து வந்தால் கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை இன்னும் 3 வாரத்திற்குள் எட்டிவிடும் என காவிரி நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே அணையில் இருந்து (வேறுவழியில்லாமல்) தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறந்துவிடப்படும் என்பதால், ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கியுள்ள டெல்டா மாவட்டங்கள் மேலும் பாதிப்பை அனுபவிக்க நேரிடும்.












Click it and Unblock the Notifications