மற்ற மாநிலங்களை போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது- குமாரசாமி
பெங்களூர்: கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டது போல் ஆட்சி அமைப்பதில் கர்நாடகத்திலும் முறைகேடு நடைபெற்று விடக் கூடாது என்று குமாரசாமியும் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வராவும் தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதுதொடர்பாக 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சென்றனர்.
அங்கு ஆளுநரிடம் கடிதத்தை அளித்துவிட்டு குமாரசாமியும் , காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் தந்தோம்.
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பெரும்பான்மை உண்டு. இதனால் ஆட்சி அமைக்க எங்களைத்தான் ஆளுநர் அழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஆளுநர் செயல்பட வேண்டும்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் சரியான முடிவை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைபதில் முறைகேடு கூடாது. அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும்.
இரு கட்சி எம்எல்ஏக்களும் யாரும் அணி தாவவில்லை. மஜதவுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை தந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.