தேமுதிக தனித்து போட்டியிடுவதால் திமுக- காங். கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை: குஷ்பு
டெல்லி: சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதால் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குஷ்பு இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குஷ்பு அளித்த பதில்கள்:

சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்திருப்பதால் திமுக- காங். கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம். தற்போது அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.
நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சோனியா, ராகுல் காந்தி ஆகியோர்தான் முடிவெடுப்பார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டால் போட்டியிடுவது தொடர்பாக பரிசீலிப்பேன்.
வரும் தேர்தலில் கோஷ்டிகள் அடிப்படையிலோ அல்லது ஜாதிய அடிப்படையிலோ காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. காங்கிரஸ் சார்பில் தனியாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது.
5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. திடீரென ஒரு மாதமாக தேர்தலுக்காக சில திட்டங்களை தொடங்கியதாக அறிவித்திருக்கிறார்கள்.
திமுக மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது பழைய விவகாரம்... கடந்த 5 ஆண்டாக அதையே அதிமுக பேசிக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு மீதான ஊழல்களை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.
விஜய்மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓட தற்போதைய ஆளும் பாஜக அரசுதான் காரணம்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.












Click it and Unblock the Notifications