நல்லா தண்ணீ ஊத்துங்க... சிறையில் குஷியாக தோட்ட வேலை செய்யும் லாலு
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், லாலு பிரசாத், சிறையில் தோட்டக்காரராக வேலை செய்கிறாராம்.
அரசியல் கலையில் பட்டம் பெற்றுள்ள லாலு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.மிலும் நிர்வாகம் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்
ஆனால் இப்போது சிறையில் தோட்ட வேலை செய்வதற்காக லாலுவிற்கு தினரும் 14 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

மாட்டுத்தீவன ஊழல்
ரூ.950 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற லாலு, எம்.பி பதவியை பறிகொடுத்துவிட்டு தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சகல வசதிகளும் இருக்கு
தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு படுக்கை, மின்விசிறி, நாளிதழ், டி.வி. என சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை குடுக்கணுமே
சிறையில் லாலுவுக்கு என்ன வேலை கொடுக்கலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு லாலு பிரசாத்துக்கு தோட்டக்காரர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறி தோட்டம்
லாலு அடைக்கப்பட்டுள்ள 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறையின் பெரும் பகுதியில் காய்கறி, பூஞ்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. காய்கறி தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கவும், மலர் தோட்டங்களில் தினமும் பூ பறித்து பராமரிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

சூப்பர்வைசர் லாலு
அந்த சிறைக்கைதிகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு லாலுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை குஷியாக செய்கிறாராம் லாலு.

லாலுவின் டிப்ஸ்
லாலு அடிக்கடி மலர் தோட்டங்களுக்குள் புகுந்து எப்படி வேலை செய்ய வேண்டும் என்று மற்ற கைதிகளுக்கு சொல்லி கொடுக்கவும் செய்கிறார்.

ரூ.14 சம்பளம்
பீகார் மாநில முதலமைச்சராகவும், மத்திய ரயில்வே அமைச்சராகவும் பல கோடி ரூபாய் வரை சம்பாதித்த லாலுவிற்கு தோட்ட வேலைக்காக லாலு பிரசாத் யாதவுக்கு தினமும் ரூ.14 சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.

ஆசிரியர் லாலு
முன்னதாக லாலுவுக்கு சிறையில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை கொடுக்கலாமா? என்று பரிசிலிக்கப்பட்டது. சிறையில் உள்ள 30 சதவீத கைதிகள் மாவோயிஸ்ட்கள் என்பதால் மற்றவர்கள் நெருங்காதபடி வேலை கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

உயிருக்கு அச்சுறுத்தல்
லாலு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கூறியதைத் தொடர்ந்து அவருக்கு ஆசிரியர் வேலை கொடுக்கபடவில்லை என்கின்றனர் சிறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications