லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்விக்கு பீகார் துணை முதல்வர் பதவி?
பாட்னா: பீகாரின் முதலமைச்சராக நாளை நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார்.பதவியேற்பு விழாவில் லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவிற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அக்கூட்டணி மொத்தம் 179 இடங்களைக் கைப்பற்றியது. இந்த கூட்டணியின் வெற்றியானது நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கியுள்ளது.

இதையடுத்து 5-வது முறையாக நாளை முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார் நிதிஷ் குமார். 2000-ம் ஆண்டு 7 நாட்களுக்கு பீகார் மாநிலத்தை நிதிஷ் ஆட்சி செய்தார். பின்னர் நவம்பர் 2005-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டிலும் ஆட்சியைப் பிடித்தார். அதன் பின்னர் பிப்ரவரி 2015-ல் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதையடுத்து 4-வது முறையாக முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். தற்போது 5-வது முறையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.
இந்நிலையில், தற்போதைய தகவல்கள்படி ஐக்கிய ஜனதா தளத்திற்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் சம எண்ணிக்கையில் அமைச்சரவையில் பிரிநிதித்துவம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
துணை முதல்வர் பதவி லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்விக்கும், சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சபாநாயகர் பதவியுடன் 3 அல்லது 4 கேபினட் அமைச்சர் பதவிகளும் காங்கிரசுக்கு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன..












Click it and Unblock the Notifications