தேர்தலில் வெற்றி பெற, தீய சக்தியை விரட்ட வாஸ்துபடி வீட்டுக் குளத்தை மூடிய லாலு
பாட்னா: நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் வாஸ்து சாஸ்திரத்தின் உதவியை நாடியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவை அவரது கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் விட்டுவிட்டு எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர். லாலு காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது என்று அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
இதையடுத்து லாலு தேர்தலில் வெற்றி பெறவும், தீய சக்திகளிடம் இருந்து தங்கள் குடும்பத்தாரை காப்பாற்றவும் வாஸ்து சாஸ்திரத்தை நாடியுள்ளார். அவர் தங்கியுள்ள வீட்டில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தை வாஸ்து நிபுணரின் பரிந்துரையின்பேரில் மண்ணை போட்டு மூடிவிட்டார். வீட்டுக்கு மத்திய பகுதியில் குளம் இருப்பதால் அது குடும்பத்திற்கும், கட்சிக்கும் தடைகளை ஏற்படுத்துகிறது என்றும், துரதிஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றும் வாஸ்து நிபுணர் கூறினாராம். அதன் பிறகே லாலு குளத்தை மூடிவிட்டாராம்.
லாலுவுக்கு மூடநம்பிக்கைகள், ஜோதிடம் உள்ளிட்டவை மீது நம்பிக்கை உண்டு என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.