ஜெயிலில் லல்லு உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு
பாட்னா: கால்நடைத் தீவண வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் லல்லு பிரசாத் யாதவுக்கு சிறைக்குள் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜார்கண்ட் சிறப்பு போலீசார் எச்சரித்துள்ளனர்.
பீகார் முன்னாள் முதலரான லல்லு பிரசாத் யாதவுக்கு கால் நடை தீவன ஊழல் செய்ததாக 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஞ்சி அருகில் உள்ள ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைக்குள் அவரது பாதுகாப்பு கருதி மற்ற கைதிகளிடம் இருந்து லல்லு தனிமைப்படுத்தி, தனியாக வைக்கப்பட்டுள்ளார்.

சகல வசதிகளும்...
தனியறையில் இருக்கும் லல்லுவுக்கு கொசுவலை, டிவி என வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. டிவியில் தூர்தர்ஷனில் செய்தி பார்க்கும் லல்லுவுக்கு செய்தித்தாளும் வழக்கப்படுகிறது.

கட்சிக்காரர்கள்...
இது தவிர லல்லு தினமும் தன் உறவினர்களையும், கட்சிக்காரர்களையும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவரைக் காண்பதற்காக சிறை வாசலில் எப்போதும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கை....
இந்நிலையில், ஜெயிலில் உள்ள சக கைதிகளால் லல்லு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர் ஜார்க்கண்ட் சிறப்பு போலீசார்.

பாதுகாப்பு....
உளவுத்துறை அதிகாரிகளும் லல்லு பிரசாத் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதால், லல்லு அடைக்கப்பட்டுள்ள அறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

பார்வையாளர்கள்...
லல்லுவை சந்திக்க வரும் அனைவரையும் நன்கு பரிசோதிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மேலும் லல்லுவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறிய சலுகை....
இதற்கிடையே சிறையில் லல்லுவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக கூறி பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

அரசியல் ஆலோசனைகளுக்குத் தடை...
அதில், சிறைக்குள் லல்லு அரசியல் ஆலோசனைகள் நடத்த தடை விதிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications