மாட்டுத் தீவன ஊழல்.. 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை
மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராஞ்சி: மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 1996-ஆம் ஆண்டு பீகார் மாநில முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்கான தீவனம் கொள்முதல் செய்ததில் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கையாடல் செய்ததாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவற்றுள் 3 ஊழல் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் தும்கா கருவூலத்தில் மாட்டு தீவன கொள்முதல் தொடர்பாக ரூ.3.76 கோடி முறைகேடு செய்ததாக பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டது.
இந்த 4-ஆவது ஊழல் வழக்கு விசாரணை கடந்த 19-ஆம் தேதி ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு குற்றவாளி என்று கூறிய நீதிபதி, ஜெகனனாத் மிஸ்ராவை விடுவித்து உத்தரவிட்டார். மேலும் தண்டனை விவரங்கள் மார்ச் 24-இல் அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மொத்தம் மாட்டு தீவன ஊழல் தொடர்பான 5 வழக்குகளில் ஏற்கெனவே 3 வழக்குகளில் 13.5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4-ஆவது வழக்கில் 7ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது லாலுவுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.