எங்கள் ஆட்சியில் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதலாம்: லாலு அதிரடி
பாட்னா: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குப்பையை கோபுரமாக்குவோம். இலவச குடிநீர் வழங்குவோம் என்றெல்லாம் கூறி வாக்கு சேகரிப்பார்கள். ஆனால் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் பேச்சோ அதிரடியாக உள்ளது.
‘பிட்' பிரச்சினை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, ஆட்சிக்கு வந்தால், 10ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வின் போது புத்தகத்தை பார்த்து எழுதும் முறையை அமல்படுத்துவோம் என அதிரடியாக அறிவித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ். அவரது பேச்சு அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ள இம்மாநிலத்தில் கடந்த வாரம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது வைஷாலி உட்பட, சில மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள், காப்பி அடிப்பதற்காக, பிட் சப்ளை செய்தனர்.

மிக உயரமான கட்டடத்தில் மாணவர்கள் தேர்வு எழுதியபோது, அதன் ஜன்னல்களில் துணிச்சலாக ஏறி, பலரும், பிட் பேப்பர்களை தூக்கிப் போட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு, பாட்னா உயர் நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இந்தப் பிரச்னை தொடர்பாக அறிக்கை தரும்படி, பீகார் அரசை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பக்சார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, மாநிலத்தில் எனது அரசு இருந்திருந்தால், தேர்வின்போது பார்த்து எழுத மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் படித்தவர்களால்தான், அதைப் பார்த்து தேர்வை எழுத முடியும். புத்தகத்தை படிக்காதவர்கள், தேர்வு முடிந்த பிறகும், புத்தகத்தில் விடைகளைத் தேடிக் கொண்டுதானிருப்பார்கள் என்றார்.
10ம் வகுப்பு தேர்வின் போது, மாணவர்கள் பார்த்து எழுதுவதில் தவறில்லை. மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு, 'பிட்' சப்ளை செய்ய, பெற்றோரும், நண்பர்களும் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். பல்லிகள் போல, பெரிய கட்டடங்களில் ஏறி, 'பிட்' கொடுத்துள்ளனர் என்றும் லாலு கூறினார்.
லாலுவின் கருத்தை பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி ஆதரித்துள்ளார். "அமெரிக்காவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தேர்வின்போது புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறை உள்ளது. இதே வழக்கம், பிற நாடுகளிலும் உள்ளன. புத்தகத்தைப் படித்த மாணவர்களால்தான், விடைகளை தேடிக் கண்டுபிடித்து எழுத முடியும் என்ற கருத்து அந்நாடுகளில் உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications