மதவாதத்தை வேரறுக்க எத்தகைய கொடிய விஷத்தையும் குடிக்க தயார்: லாலு ஆவேசம்
டெல்லி: நாட்டில் மதவாதம் எனும் கொடிய நச்சுப் பாம்பை அழித்தொழிக்க விஷத்தையும் கூட குடிக்க தயாராக இருக்கிறேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைக்க முயற்சித்தன.
ஆனால் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் முன்னிலையில் பீகார் முதல்வர் நிதிஷ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தை முடிவில், மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இணக்கம் ஏற்பட்டது. மேலும் இக்கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் கூறியதாவது:

முதல்வர் பதவி போட்டியில்லை
நான் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. அதேபோல் என் குடும்பத்தினரும் போட்டியிடவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் மதவாத சக்திகள் எந்த வகையிலும் ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

விஷத்தையும் குடிப்பேன்
அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒருங்கிணைவதற்கான எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த நாட்டில் மதவாதம் எனும் நச்சுப் பாம்பை நசுக்க வேண்டும்.. இதற்காக நான் எந்த விஷத்தையும் கூட குடிக்க தயாராக இருக்கிறேன். அவர்களை பீகார் மண்ணைவிட்டே விரட்ட வேண்டும்.

காங்கிரஸும் வரனும்
எனக்கும் நிதிஷ்குமாருக்கும் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. ராஜ்யசபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவாக இருந்தோம் நாங்கள்... நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணி என்பது காலத்தின் தேவை.
காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. காங்கிரஸ் கட்சி எங்களுடன் கூட்டணி அமைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

பெவிலியனுக்கு பாஜக..
நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்குவதற்கான யுத்தம் இது. பாரதிய ஜனதா கட்சியை ஒருபோதும் வெல்ல விடமாட்டோம்...அந்த கட்சியை பெவிலியனுக்கே திருப்பி அனுப்புவோம்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications