டெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சீக்கியர்கள் முற்றுகை பதற்றம்
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றி தவறான தகவலை தெரிவித்ததாக கூறி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை சீக்கியர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலராக இருந்த சீக்கியர்களால் 1984 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதனிடையே டெல்லியில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லருக்கு தொடர்பு கிடையாது என அமிர்தசரஸ் தொகுதியில் நிற்கும் அக்கட்சி வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அவர்கள் டைட்லர் குற்றமற்றவர் என சான்று வழங்கிய அம்ரீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை தாண்ட முயன்றதால் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
கடந்த காலங்களில் சீக்கியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸ் கட்சி டைட்லருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மறுத்தது தற்போது அம்ரீந்தர் வெளியிட்ட கருத்து சீக்கிய அமைப்புகளை மறுபடியும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஒருவர் கூறுகையில், "அம்ரீந்தர் கூறிய கருத்துக்கு நாங்கள் இந்தத் தேர்தலின் மூலம் பதில் தருவோம். நாங்கள் இங்கே முற்றுகையிட்டதற்கு காரணம், காங்கிரஸ்காரர்கள் என்பதால் மட்டுமே.
அம்ரீந்தருக்கு அமிர்தசரஸ் தொகுதியை ஒதுக்கியதற்கும், ஜெகதீஷ் டைட்லருக்கும் நற்சான்று வழங்கியதற்கும் சோனியாவும் ராகுலும் பதில் கூறியாக வேண்டும்" என்றார் அவர்.












Click it and Unblock the Notifications