ஆக்ராவுக்கு வந்த அழகு நிலா சானியா... 'செவ்வாயில்' ஏமாற்றம்.. புதனன்று 'பூரிப்பு'!
ஆக்ரா: லேட்டாக வந்ததால் தாஜ்மஹாலைப் பார்க்க முடியாமல் போய் விட்டது இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவால். இதனால் அடுத்த நாள் வந்து தாஜ் மஹாலைப் பார்த்து சந்தோஷித்துச் சென்றார் சானியா.
செவ்வாய்க்கிழமை மாலைக்கு மேல் தாஜ்மஹாலைப் பார்க்க வந்திருந்தார் சானியா. ஆனால் பார்வையாளர் நேரத்தைத் தாண்டி அவர் வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த சானியா, வெளியில் இருந்தபடி தாஜ்மஹாலைப் பார்த்து விட்டுப் போனார். ஆனால் நேற்று மீண்டும் தாஜ்மஹாலுக்கு வந்து உள்ளே போய் அழகை ரசித்துச் சென்றார்.
ஆக்ராவில் நிகழ்ச்சி....
ஜேபி பாலஸ் ஹோட்டல் ஒன்று ஆக்ராவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான சானியா மிர்ஸாவும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவும் ஆக்ரா வந்திருந்தனர்.
முதலில் வந்த கும்ப்ளே...
செவ்வாய்க்கிழமை மாலையில் முதலில் கும்ப்ளே தாஜ்மஹாலைப் பார்க்க வந்தார். அவர் பார்வையாளர் வருகை நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டதால் உள்ளே போய் விட்டார்.
தாமதமாக சானியா...
ஆனால் சானியா மிர்ஸா சற்று தாமதமாக வந்ததால் உள்ளே போக அனுமதி கிடைக்கவில்லை. இதனால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த கலை நயம் மிக்க காதல் சின்னத்தைப் பார்க்க அவரால் முடியாமல் போய் விட்டது. ஏமாற்றமடைந்தார்.
மீண்டும் வந்தார்...
இதனால் நேற்று மீண்டும் சானியா தாஜ்மஹாலுக்கு வந்தார். இந்த முறை சீக்கிரமே வந்ததால் அவரால் உள்ளே போக முடிந்தது. தாஜ்மஹாலின் எழிலை கண் குளிரக் கண்டு ரசித்தார். புகைப்படமும் எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பிச் சென்றார்.