மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலி!

சட்ட பயிற்சி மாணவி ஒருவர் தம்மை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கியதாக இணையபக்கம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதை வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி ஒன்றையும் அமைத்தது.
இருப்பினும் யார் அந்த ஓய்வுபெற்ற நீதிபதி என்பது தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி மீதுதான் அந்த மாணவி புகார் கூறியது தெரியவந்துள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை கமிட்டி இது தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற்றதைத் தொடர்ந்தே புகாரில் சிக்கியது ஏ.கே. கங்குலி என தெரிந்தது.
தம் மீதான புகார் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஏ.கே. கங்குலி அளித்த விளக்கம்:
என் மீது கூறப்பட்டிருக்கும் இந்த புகார் அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த புகாரை முழுவதுமாகவே நான் நிராகரிக்கிறேன்.
எனக்கு அந்த சட்ட பயிற்சி மாணவியை தெரியும். அவர் என்னுடன் பணியாற்றி இருக்கிறார். என்னுடைய வீட்டுக்கும் கூட வந்திருக்கிறார். இது போன்ற பிரச்சனையை என்னுடன் பணியாற்றிய காலத்தில் ஒருபோதும் அவர் எழுப்பியதே இல்லை.
அவர் என்னுடன் உணவு சாப்பிட்டிருக்கிறார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர் என்னுடைய குழந்தைப் போல.. அவரை நான் ஒரு குழந்தையாகவே நடத்தினேன்.. அவர் தன்னுடைய இணையபக்கத்தில் கூட என் மீது மரியாதை வைத்திருப்பதாகவே தெரிவித்திருக்கிறார்.
அவர் என்னால் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்பாக என் மீதான அனைத்து குற்றச்சாட்டையுமே மறுத்திருக்கிறேன். அந்தப் பெண் என்ன புகார் கொடுத்திருக்கிறார் என்ற விவரம் கூட எனக்கு இதுவரை தெரியாது. அப்பெண்ணிடம் நான் பேசவில்லை. அவரிடம் பேசுவதற்கு முயற்சித்தேன். அவர் பதிலளிக்கவில்லை.
என்னுடைய நீதித்துறை பணியை வைத்து இந்த நாட்டு மக்கள் என்னை மதிப்பிடுவார்கள். இப்படியான புகார்கள் எழுமேயானால் நீதிபதிகள் தொடர்ந்து பணியாறுவது என்பது மிகவும் கடினம் என்பதை ஆழ்மனதில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன், இதே நிலைமை நீடித்தால் உச்சநீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கை பொய்த்துவிடும்.
இவ்வாறு ஏ.கே. கங்குலி கூறியுள்ளார்.
இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications