மிசோரத்திலும் ஒரு முன்னாள் ஐபிஎஸ்! MNF, காங்கிரஸ், பாஜக எல்லோருக்கும் தலைவலி -கேம் சேஞ்சராகும் ZPM
அய்சால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அங்கு உள்ள அரசியல் சூழல் என்ன? யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பதை அலசுவோம்.
இந்த தலைமை தேர்தல் ஆணையம் இன்று 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி வட கிழக்கு மாநிலமான மிசோரத்தில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் 39 தொகுதிகள் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகளாகும். ஒரு தொகுதி மட்டுமே பொதுத்தொகுதியாக உள்ளது. தற்போது பாஜக கூட்டணியில் உள்ள எம்.என்.எஃப் எனப்படும் மிசோ தேசிய முன்னணி கட்சி அங்கு ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் முதலமைச்சர் சொராம்தாங்கா முதலமைச்சராக இருந்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆளும் எம்.என்.எப் கட்சி 27 இடங்களில் வெற்றிபெற்றது. அடுத்ததாக ZPM எனப்படும் ஜொராம் மக்கள் முன்னணி கட்சி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இந்த அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மிசோரம் மாநில தேர்தல் வரலாற்றை பொறுத்தவரை ஒரு கட்சி 2 முறை அடுத்தடுத்து வெற்றிபெற்று ஆட்சியில் இருக்கும். அடுத்ததாக மக்கள் வேறொரு கட்சியை அடுத்த 2 தேர்தல்களில் வெற்றிபெற வைக்கிறார்கள். அந்த வகையில் பு லல்தன்ஹவ்லா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 10 ஆண்டுகள் ஆட்சி செய்யவிட்ட மிசோரம் மக்கள், 2018 தேர்தலில் அக்கட்சியை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வைத்து அரசை மாற்றினர். இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் 2 வது வாய்ப்பை மக்கள் எம்.என்.எப் கட்சிக்கு அளித்து சொராம்தாங்காவை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவார்களா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அப்படி நடந்தால், 1987 ஆம் ஆண்டு மிசோரத்துக்கு மாநில அந்த கிடைத்ததில் இருந்து அதிக ஆண்டுகள் அங்கு ஆட்சி செய்த முதலமைச்சர் என்ற பெருமையை பெறுவார். இப்போது ஆளும் எம்.என்.எப் கட்சிக்கு அடுத்த இடத்தில் வாக்கு சதவீத அடிப்படையில் காங்கிரஸ் பெரிய கட்சியாக உள்ளது. ZPM கட்சி 6 தொகுதிகளில் வென்று இருந்தாலும் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸை விட குறைவுதான். ஆனால், தற்போது அக்கட்சி மக்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்குடன் காணப்படுவதால் எம்.என்.எஃப் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சவாலாக உள்ளது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான லால்துஹோமாவால் தொடங்கப்பட்டது இக்கட்சி. இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தவர். அந்த பணியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இருந்து இணைந்து எம்பியாகவும் தேர்வானார். அதன் பின்னர் காங்கிரஸில் இருந்து விலகியதால் அவர் எம்பி பதவியை இழந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜொராம் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த கட்சிக்கு ஆம் ஆத்மியை போல் இளைஞர்கள், நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி இருக்கிறது. தற்போது எம்.என்.எப், காங்கிரஸ், ZPM ஆகிய கட்சிகள் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இம்முறை 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ள பாஜக விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications