லிபியாவில் கடத்தப்பட்ட 2 பேராசிரியர்கள் நிலை என்ன? அரசின் தாமதத்தால் குடும்பத்தார் கலக்கம்
ஹைதராபாத்: கடத்தப்பட்ட இந்தியர்கள் பற்றி சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால், ஹைதராபாத்திலுள்ள அவர்கள் குடும்பத்தார் வேதனையடைந்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த 4 இந்தியர்கள் லிபியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியது. பின்னர் அதில் கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், ஹைதராபாத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா மற்றும் பல்ராம் கிஷன் ஆகிய இருவர் மட்டும் சிக்கியுள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், அரசு தரப்பில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பேராசிரியர்கள் குடும்பத்திற்கு இதுவரை எந்த தகவலும் தரப்படவில்லை. பல்ராமின் மனைவி ஸ்ரீதேவி செல்போனுக்கு, லட்சுமிகாந்த் என்ற பேராசிரியரின் செல்போனில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், தாங்கள் எல்லோரும் நலமாக இருப்பதாக மட்டும் கூறப்பட்டுள்ளது.
இந்த லட்சுமிகாந்த் தற்போது விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் பல்ராம் விடுதலையாகவில்லை என்பதே கடைசியாக கிடைத்துள்ள தகவல். எனவே கணவன் தன்னோடு போனில் பேசாதவரை இந்த மெசேஜின் நம்பகத் தன்மையில் சந்தேகம் நிலவும் என்று ஸ்ரீதேவி கூறிவருகிறார்.
கணவர் மற்றும் அவரது நண்பர்கள் ஒருவரையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார். கோபி கிருஷ்ணன் வீட்டிலும் இதேபோன்ற படபடப்பு நிலவுகிறது. எனவே ஹைதராபாத்தை சேர்ந்த இரு இந்தியர்களும் விடுதலையாகிவிட்டார்களா இல்லையா என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications